Agitation agricultural labor unions : மயிலாடுதுறை மாவட்டம் தேவூர் தபால் நிலையம் முன்பு 100 நாள் வேலை திட்டத்தில் ஆதார் இணைப்புடன் கூடிய பரிவர்த்தனை நடைமுறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் நகலை எரித்து விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் மூலமாக கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது இந்தத் திட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை செய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக 100 நாள் வேலை திட்டத்தில் பயன்பெறும் தொழிலாளர்களின் ஆதார் எண்களை இணைத்து பணப்பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தத் திட்டத்தால் கோடிக்கணக்கான தொழிலாளர்களை வெளியேற்றி 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் அபாயத்தை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்களில் தமிழகம் முழுவதும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தேவூர் தபால் நிலையம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் உத்தரவு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read Also : தரங்கம்பாடி அருகே மாயமான வாலிபரின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது
அகில இந்திய துணைத் தலைவர் லாசர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆதார் இணைப்புடன் கூடிய பணப்பரிவர்த்தனையை திரும்ப பெற வேண்டும், அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்,சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக வேலையை துவங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பியும் உத்தரவு நகலை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது… இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.